Wednesday, June 22, 2016

இப்டா கூட்டம்

#இப்டா சிவகாசி கிளையின் 11 ஆவது கூட்டம்#

அன்புடையீர் வணக்கம்,


இன்று 22.6.16 (இந்திய மக்கள் நாடக மன்றம்) சிவகாசி கிளையின் 11 ஆவது கூட்டம் திரை விமர்சன அரங்காக நடை பெற்றது. நிகழ்வு சிவகாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாடலாசிரியர் ஸ்வரமஞ்சரி  அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ஏ.ஆர்.எம்.முத்து அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் 'இறைவி' மற்றும் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' ஆகிய படங்களின் மீது விமர்சன விவாதம் நடைபெற்றது. குறும்பட இயக்குனர்கள் செல்வதரன், சரனிதா, சரவணகாந், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பாடலாசிரியர் டுவிட்டூ பாண்டூ மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவாதத்தில் கலந்து சிறப்பித்தனர். கிளைத் தலைவர் தங்கமாரிமுத்து நன்றியுரையாற்றினார்.





Wednesday, May 25, 2016

பாசிசத்தை வீழ்த்திய சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்

பாசிசத்தை வீழ்த்திய சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்

வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர்

. இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன்.

அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய நாசமும், அழிவும் சொல்லில் அடங்காது. போரில் லட்சக்கணக்கானோர் மடிந்து போயினர்.

மனிதன் அதுகாறும் சாதித்த அனைத்தின் மீதும் உலகந்தழுவிய அளவில் அழிவு தாண்டவமாடியது. உயிரோடு அன்று வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களும் சொல்லொணத் துன்ப துயரங்களுக்கு ஆளாயினர்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதும், அதை எந்த வகையிலாவது தவிர்க்க வேண்டும் என்பதும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு நமக்கு எடுத்துரைக்கும் எச்சரிக்கை.

எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் அன்றைய சோவியத் மக்களும், செஞ்சேனையும், பாசிசத்தை வீழ்ச்சி அடையச் செய்தனர்.

இது ஒருநாடு பெற்ற வெற்றி என்பதாகக் கருதிடக் கூடாது. சோசலிசம் எனும் தத்துவம் உலக மக்களை அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து மீட்டு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர எத்தகு தியாகத்தையும் செய்திடவல்ல மேன்மையான தத்துவம் என்பதையே இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

ஏனெனில், பாசிசம் மனித இனத்தின் சுதந்திர வேட்கையை முற்றாக ஒழிக்க முயன்றது. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, நாடுகளையும் மக்களையும் தனது அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உலகமே அழிந்து போனாலும் அழியட்டும் என்ற வெறியோடு பாசிசவாதிகள் செயல்பட்டனர்.

பாசிச வீழ்ச்சிக்குப் பின், மகத்தான சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தன. இவையும் இந்த நிகழ்வின் மகத்துவம்.

காலனி ஆதிக்கம் உடைக்கப்பட்டு அடிமை நாடுகள் விடுதலை பெற்றன

. பல ஐரோப்பிய நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்தன. சீனா, வியட்நாம், வடகொரியா ஆகியன ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து விடுதலையாகி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தன. இந்தியா உள்பட பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கிட்டியது.

1945, மே 9ஆம் நாள்தான் இந்த வெற்றி முழுமையடைந்த தினம். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியில் நுழைந்து, ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்ஸ்டாக் மீது வெற்றிக் கொடியை ஏற்றியது.

இந்த மகத்தான தருணத்தை, ஜெர்மனியில் அன்று வாழ்ந்த எழுத்தாளர் தாமஸ் மான் எழுதினார்.

இந்த மணித்துளிகள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் நேரம் ஆகும். கொடூர மிருகமான (பாசிச) டிராகன் வீழ்ந்தது

தேசிய சோசலிசம் என்ற பெயரில் அனைவரையும் நடுங்கிட ஒடுங்கிடச் செய்த பூதம், கடைசியாக ஒழிந்தது. இட்லர் நாடு என்ற இழிச் சின்னத்தை எறிந்து விட்டு, ஜெர்மனி அதிலிருந்து மீண்டது.

முதல் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியை வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை எனும் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்தனர்.

இது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் நிபந்தனைகளை விதித்து ஜெர்மானிய மக்களை வாட்டிடும் வகையில் அமைந்தது.

கிட்டத்தட்ட 300 கோடி டாலர் அளவிற்கு நஷ்ட ஈடாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஜெர்மானிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது

. இதனால் இட்லர் தனது இனவெறி கொள்கைகளை, சோசலிச முலாம் பூசி, மக்கள் ஆதரவைப் பெற்றிட வாய்ப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று இத்தாலியுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்களும் இத்தாலிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி முசோலினி தலைமையில் பாசிசம் இத்தாலியில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

முசோலினிக்கும், இட்லருக்கம் பெரும் தொழிலதிபர்கள், நிலச் சுவான்தார்கள் பக்கபலமாக இருந்தனர். ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உலகச் சந்தையையும் கைப்பற்றிட ஏணியாக பயன்படக்கூடிய மக்கள் தலைவர்கள் என்று இத்தாலி, ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம் கருதியது.

இந்த அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான், அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையான அணு ஆயுதத் தாக்குதலை எதிர் கொண்டது.

ஜெர்மனி, இத்தாலி போன்று அதிகாரப்பூவர்மாக பாசிசத்தை ஜப்பான் ஏற்கவில்லை என்றாலும், அதன் அன்றைய அரசாங்கத்தில் இருந்த ராணுவ மேலாதிக்கம், 1936 – 37ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் இவை மூன்றும் சேர்ந்த அச்சு நாடுகள் என்ற கூட்டணியை உருவாக்கியது.

Tuesday, April 12, 2016

மக்கள் கலைஞர் பால்ராஜ் சகானி
------------------------------------------------------------------

மக்கள் கலைஞர் பால்ராஜ் சகானியின் வாழ்வும் பணியும் ஓர் நல்ல வாழ்வின் உதாரணமாகும். அவர் செய்தது அல்லது எழுதியது சாதாரண மக்களால் புரிந்துகொள்ளக்கூடியது. ஆரோக்கியமான விதைகளை விதைத்து அவை தம் வாழ்நாளிலேயே வளர்ந்ததைக்கண்ட வீரஞ்செறிந்த ஆரோக்கியமான குழுவைச் சேர்ந்தவர் பால்ராஜ். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையைக் கொண்ட பூரணச்சந்திர ஜோஷியின் நண்பருமாவார். இந்திய மக்கள் நாடக மன்றம் “–இப்டா”—வின் (IPTA-INDIAN PEOPLE'S THEATRE ASSOCIATION) தந்தை என இவரைக் கூறலாம்.
 பால்ராஜ் சகானி  ராவல்பிண்டியில் ஒரு பாரம்பரிய பஞ்சாபி வர்த்தக குடும்பத்தில்1913ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் பிறந்தார். அவருடைய இயற் பெயர் யுதிஸ்டிர சகானி அவர் லாகூர் பல்கலைக் கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் தமையந்தியைத் திருமணம் செய்து கொண்டார்.
  1930ஆம் ஆண்டு வாக்கில் தனது மனைவியுடன் வங்கம் சென்று மகாகவி இரவீந்திரநாத்தாகூர் நடத்திவந்த சாந்தி நிகேதன் பல்கலையில் சேர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். வெளியே தேசிய இயக்கம் சூடுபிடித்துக்கொண்டிருந்தது. சாந்தி நிகேதனிலிருந்து வெளியேறி மகாத்மா காந்தியின் வார்தா சேவாகிராம ஆசிரமத்தில் இணைந்து பணியாற்றினார். மகாத்மாவின் அருகில் இருந்து அவரைக்காணும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. சாந்தி நிகேதனிலிருந்து சிறந்த மனிதாபிமானத்தையும் வார்தாவில் அவர் இந்திய தேசபக்த உணர்வையும் கிரகித்துக் கொண்டார்.
  சகானி காந்தியின் வார்தா ஆசிரமத்தில்  தொண்டுப் பணி ஆற்றிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து வானொலிச் செய்தியாளர்கள் (பி.பி.சி) வார்தா ஆசிரமம் வந்திருந்தனர். அங்கே சகானியின் திறமைகளைக்கண்டு அவரை பி.பி.சி. யில் ஹிந்தி மொழிச்செய்தி வாசிப்பாளராகவும் உரையாடல் எழுதும் பணியாளராகச் சேரவும்  சம்மதம் கேட்டனர். பரந்துபட்ட உலகம் முழுவதும் சுற்றி தனது பட்டறிவை விரிவாக்கிக்கொள்ளக்கருதிய சகானி அதற்குச்சம்மதம் தெரிவித்தார். தனது மனைவியுடன் லண்டன் சென்று இங்கிலாந்து வானொலி (பி.பி.சி)யில் பணியில் சேர்ந்தார்.  இங்கிலாந்தில் பணியாற்றும் காலத்தில் இங்கிலாந்து அரசியல் அனுபவமும் வாழ்க்கையும் சேர்ந்து. பால்ராஜ் மற்றும் தமயந்தியை இந்திய சுதந்திரத்திற்கு உறுதியாக நிற்கக்கூடிய பாசிசத்திற்கெதிரான செயலூக்கத்துடன் கூடிய ஒரு கட்சியைத் தேடும்படி செய்தது. இங்கிலாந்து வானொலியிலேயே இங்கிலாந்து கம்யூனிஸ்டு அறிவு ஜீவிகளும் தொழிலாளிகளும் இருந்தனர். அவர்கள் பால்ராஜையையும் தமயந்தியையும் இங்கிலாந்து கம்யூனிஸ்டு இதழ் “டெய்லி ஒர்க்கரையும்” மற்றும் மார்க்ஸீயம்–லெனினீயம் பற்றிய புத்தகங்களையும் படிப்பதற்கு உதவினர். இந்தத் தொடர்பானது, அவர்களது வாழ்வில் புதிய வழியைக்காட்டியது.
            இங்கிலாந்து வானொலியில் வேலைசெய்ததானது அவருடைய உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதையும், நவீனப்படுத்திக் கொள்வதையும் சாத்தியமாக்கியது. இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சிக்கு பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பாக உதவ  நியமிக்கப்பட்ட தோழர் பென் பிராட்லி பால்ராஜ் சகானியையும் தமயந்தியையும் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் ஆக்கினார். 1944ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  பணியிலிருந்து விலகி இந்தியா வந்து சேர்ந்தனர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை அப்போது மும்பையில் இருந்தது. அவர்கள் இங்கிலாந்துக் கட்சிச் சான்றிதலுடன் தோழியர் பார்வதிகிருஷ்ணன் மூலம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச்செயலாளராயிருந்த தோழர் பி.சி.ஜோஷியைச் சந்தித்தனர்.
   இவர்களின் ஆர்வத்தையும் திறமைகளையும் அறிந்துள்ள தோழர் பி.சி.ஜோஷி  இவர்களுக்குப் பொருத்தமான பணிகளைக் கொடுத்தார். இந்திய மக்கள் நாடக மன்ற (இப்டா) வின் அமைப்பாளர் பொறுப்பு தோழர் பால்ராஜ் சகானிக்கு வழங்கப்பட்டது. பால்ராஜ் அவருடைய எல்லையற்ற சக்தி மற்றும் பிரகாசமான எதிர்காலப் பார்வையுடன் இப்டா அமைப்பாளர் என்ற முறையில் செயல்பட ஆரம்பித்தார்.  சகானியும் தமயந்தியும் தங்கள் பணிகளைத் துவக்கினர். தமயந்தி பிரித்விராஜ் கபூர் அவர்களின் பிரித்வி தியேட்டரில் பணியில் சேர்ந்தார். தமயந்தி பணிவான நடிகையாக தன் பணியைத்துவக்கினார். வெகு வேகமாகத் தன் முத்திரையைப் பதித்தார்.
 மும்பையில் உள்ள தொழிலாளர்பகுதிகளுக்குள் தனது பணியை ஆரம்பித்தார் சகானி. தொழிலாளி வர்க்கத்திடையே நல்ல கலைஞர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டுப்புறக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்களுடன் நெருங்கியவர்களாக இருந்தனர். அவர்களுடன் நேச உணர்வை வளர்த்துக் கொண்டார் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு குழுவாக அணிதிரட்டினார்.
தமாஷா என்பதுதான் மகாராஷ்டிராவின் பாரம்பரிய கிராமீய நாடகமாகும்  அந்நிழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் நடத்துவதிலும் பிரபல்யமாகவிளங்கியவர் அன்னாபாவ் சாத்தே என்பவராவர். அவருடன் தொடர்பு கொண்டு பழகி வேண்டிய உதவிகளைச் செய்தார். முற்போக்கான கருத்துக்களுடன் தமாஷா என்ற கிராம நாடகங்கள் ஏராளமாகத் தயாராயின நாடோடிக் கலை உணர்வு மற்றும் தமாஷாவின் பாரம்பரியம் பாதித்திடாமல் நவீன மேடைக்கலையைக் கற்கச்செய்து அன்னாபாவுடைய குழுவின் செயல்பாட்டை விரிவுபடுத்தினார். பால்ராஜும் அவரது இப்டா குழுவினரும் மக்கள் கலைஞர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
பால்ராஜ் சகானியின் மற்றதொரு அரியகண்டுபிடிப்பு “அமர் ஷேக்” ஆகும் அவர் ஏற்கனவே பிரபலமான நாடோடிப் பாடகர். அவர் மராத்தி மற்றும் இந்துஸ்தானியில் அவரால் இசை அமைக்க முடியும். அவருக்கு மறக்கமுடியாத கம்பீரமான குரல். பால்ராஜ் அவருடன் நல்ல உறவுடன் நட்புக் கொண்டார். அனைத்துப் பகுதியிலுமிருந்த சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த பயிற்சியளித்து இப்டா தனது மையக் குழுவை அமைத்துக் கொண்டது.
 இந்தக் குழுவுக்கு பிரித்வி ராஜ் கபூர் ,முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ் போன்றோர் ஆதரவளித்தனர். வங்கப் பஞ்சம் சமயத்தில் இக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பொருள் திரட்டி அங்கே அனுப்பினர். நன்கு வடிவமைக்கப்பட்டஇக்குழு இந்தியாவின் ஆன்மா என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. இது பார்வையாளர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.
பால்ராஜ்  இன்சாப் என்கிற இந்திப்படம் மூலம் தன்னுடைய திரைப்பட பிரவேசத்தைத் தொடங்கினார். அவர் சினிமாவை எப்படி சமூக மாற்றத்திற்காக,நிகழ்கால சமூகப் பிரச்சனைகளை பதிவு செய்யும் ஊடகமாக மாற்றுவது என்றசிந்தனையுடன் இயங்கினார்.1946இல் மூன்றுபடங்களில் நடித்தார். அது அவரைப் புகழேணீயில் ஏற்றியது. “தார்டி கி லால்” திரைப்படத்தில், பால்ராஜ் மனைவி தமயந்தி அதிலும் மனைவியாக நடித்தார். கே.ஏ. அப்பாஸ் இயக்குனராக இருந்தார். நடனங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் இப்டா குழுவினரே உருவாக்கியது.
யுத்தம்முடிந்தவுடன் இந்தியாவில் தேசிய எழுச்சி அதிகரிக்கத்தொடங்கியது.இந்திய ஆயுதப்படைகள் மத்தியில் பிரிட்டீஷாருக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்தெழலாயின இந்தியக் கடற்படை கிளர்ச்சியில் இறங்கியது. கடற்படை வீரர்கள் மும்பையின் தெருக்களுக்கு வந்தனர் நகர் முழுதும் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. பிரிட்டீஷ் அரசின் பீரங்கிப்படைப்பிரிவும் ஆயுதம் தாங்கிய ராணுவப்பிரிவும் அனைத்து இடங்களிலும் கண்ணைமூடி சுட ஆரம்பித்தன.கடற்படை வீரர்களையும் மக்களையும் காக்கும் பணியில் கட்சி இறங்கியது. பால்ராஜ் முன்பு வீசி எறிந்த ஆங்கிலேய உடைகளை அணிந்துகொண்டு டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் நிருபர் போல நகரெல்லாம்  தனது மோட்டார்  சைக்கிளிலும் வாடகை வாகனங்களிலும் சுற்றி கட்சித்தலைமையின் உத்திரவுகளை நிறைவேற்றினார். இக்கடற்படை எழுச்சி வெகுஜன எழுச்சியைத்தூண்டியது.
 நாடு பின்னர் இக்கட்டான ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கியது சமுதாயம்.  இந்து–முஸ்லீம் மதக்கலவர அலை பரவத்தொடங்கியது. தொழிலாளி வர்க்கப் பகுதிகளை ஆர்.எஸ்.எஸ்ஸின்  வகுப்புவாத அபாயம் சூழ்ந்துவிடாமல் தடுப்பதற்கு பால்ராஜ் இப்டாவின் மூலம் ஓரங்க நாடகங்கள் தெருமுனை நாடகங்கள் நடத்தினார்.
நாடு விடுதலை அடைந்தது. 1948ஆம் ஆண்டின் துவக்கத்தில் இரண்டாவது கட்சிக் காங்கிரசுக்குப்பின் கட்சிக்குத்தலைமையை ஏற்றார்.தோழர் ரணதிவே.  கட்சிக் காங்கிரஸின் அதிதிவீர முடிவால் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கியத்தோழர்கள் அனவரும் கைது செய்யப்பட்டனர். பால்ராஜ் கைது செய்யப்பட்டு மும்பையின் முக்கியத் தோழர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவி தமயந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். பால்ராஜ் பலதிரைப்பட ஒப்பந்தங்களைப் பூர்த்திசெய்யாமல் இருந்தார். தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நிபந்தனைகளுடன் நடிக்க அனுமதித்து பின் சிறைக்கு அழைத்துச்சென்றனர். விடுதலைக்குப் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 1953இல் பிரபலவங்கத் திரைப்பட இயக்குனரான “பீமல் ராயின்” இந்திப்படமான “டூ பிக்ஹா ஜாமீன்” படத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். அப்படம் சர்வதேச                     திரைப்பட விழாவான கென்ஸ் திரைப்பட விழாவில் (Cannes)                                      விருது வென்றது. தனது சொந்தமான திரைப்பட ஸ்டூடியோவில் தன் திறமைகள் எல்லாம் வெளிப்படுத்தி பல சிறந்த படங்களை உருவாக்கினார். .பால்ராஜ் மொத்தம் 79 படங்களில் நடித்துப் பெரும் புகழ் ஈட்டினார்.  டில்லியில் பால்ராஜ் சகானியும் பி. கே. வாசுதேவன் நாயரும், 1959ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ.ஐ.ஒய்.எஃப்.) ஆரம்பித்தனர். அதன் மாநாட்டில் முதல் தலைவராக பால்ராஜ் சகானி தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பைத் திரைப்பட உலகு பண ஆதிக்கத்திற்கு இரையாகிவிட்டது. எனவே அவர் மும்பை திரைப்பட உலகிலிருந்து வெளியேறினார். தன் சொந்த மாநிலமான பஞ்சாப் சென்றார்.
 பஞ்சாபி மொழியில் புலமை பெற்றார்.. இளம் பஞ்சாபியக் கலைஞர்களை ஒன்றுசேர்த்து ஒரு பஞ்சாபிய நாடகக்குழுவை உருவாக்கினார். பஞ்சாபி மொழியில். பலநூல்கள் எழுதி வெளியிட்டார். 1969 இல் சோவியத்நாடு சென்றுவந்தார். புகழ்பெற்ற “மேரா ரூசி சபர்நாமா” நூலை எழுதினார். இந்நூலுக்கு   சோவியத்நாடு நேரு நினைவுப் பரிசு கிடைத்தது.
1972ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின் துவக்க உரையை நிகழ்த்தினார். அவ்வுரை பெரும் புகழைப் பெற்றது. மக்கள் நல்வாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த பால்ராஜ் சகானி அவர்கள் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் காலமானார். இந்திய அரசாங்கம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி அவரது படத்தை அஞ்சல் தலையாக வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
ஏப்ரல் 13 பால்ராஜ் சகானி அவர்களின் நினைவுநாள். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

கட்டுரை :
        ஆர். பாலச்சந்திரன்.
        தொல்பொருள் ஆய்வாளர்,
        திருத்தங்கல்.
        செல் : 9486207060.

Tuesday, October 6, 2015

நிலையாமை

No man ever steps in the same river twice, for it's not the same river and he's not the same man.

Heraclitus

 நிலையாமை என்பது நிதர்சனமானது தவிர்க்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தமே மாற்றத்திற்கு உட்பட்டது. இதைத் தான் மேலே உள்ள வரிகள் வெளிப்படுத்துகிறது. இதையே மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் புத்தர். இதையே சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் வெளிபடுத்தினார் மார்க்ஸ். எனவே என்றுமே மாறாத நிலையான பொருள்,  என்ற ஒன்று (அதாவது ஆத்மா) இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது என்கிறார் புத்தர். மாற்றத்தின் வேகத்தை கூட்டலாம் குறைக்கலாமே தவிர, அதை தவிர்க்க முடியாது. இது தான் அவரது அனாத்மா வாதம். ஆத்மா என்ற ஒன்று இல்லை என்றால், பேராத்மாவாகிய கடவுளும் இல்லை என்கிறார். நிலையாமை என்பதை  நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை விடுத்து நாம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் எனும் பேராசையில் ஆத்மா, ஒளி உடல் அதற்கான வழிமுறை என செல்வது, போகாது ஊருக்கு வழியே ஆகும். இந்த ஆசையைத் தான், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.
                        - பாண்டூ, சிவகாசி .

Friday, July 4, 2014

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...

சவாலை ஏற்குமா ஜோதிடம்?



நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை
ஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்
தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.
பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திரா
நூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,
1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,
பெங்களூரு - 560 014.  செல்பேசி: 94498 80117.

மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி அதில் ஆய்வு செய்த பிறகு ஜோதிடம் பொய் என்னும் உண்மையை அறிந்துகொண்டு அதைத் துணிவுடன் வெளிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜோதிடம் உண்மை என்று மெய்ப்பிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருவதாக அறைகூவல் விடுத்துள்ளவர் பேராசிரியர் ஏ.எஸ்.நடராஜ். விரிவான அவருடைய ஜோதிடத்திற்குச் சாவல் என்ற நூலைத் தொடர்ந்து, அதைவிடக் கூர்மையாக ஜோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை என்ற நூலை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவமே இந்நூல். பாராட்டுக்குரிய வெளியீடான இந்நூலிலிருந்து சில பகுதிகள்...
as_natraj
சில பலசோதிடம் (பலன் கூறல்) வெற்றி / தோல்வியாவதன் இரகசியம் -
1. சோதிடர்களின் சில முற்குறிப்பு Prediction) உண்மையாவது எப்படி? என்று கேட்கிற கேள்விகளில் இரகசியம் இருக்கிறது?
சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே விஞ்ஞானிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம்: சோதிடம் பொய் மற்றும் அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!
i.. கேள்வி விதி, ii. திறன், iii. அனுபவம், iv. வாக்குச் சாதுரியம், v. சாதகனின் மனநிலை, vi. சாதாரண அறிவு மற்றும் vii. வாய்ப்பும் திறமைமிக்க ஊகமும் ஆகிய ஏழு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறுஎந்த ஆதாரத்தின் மீதும் இது நடப்பதில்லை. எ.கா: கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. சில சோதிடர்கள் சிலருக்குச் சொல்லும் சோதிடங்களில் ஒரு சிலவே உண்மையாகின்றன.
அந்த சில சோதிடம் உண்மையாவது சோதிடம் உண்மை என்ற காரணத்திற்காக அல்ல. சூழ்நிலைக்கேற்றபடி ஊகிக்கும் அவனது திறன், இருமுறை சொல்வதில் யாரும் எதிர்பார்க்காதபடி உண்மையைத் தேர்ந்தெடுக்கும் அவனது அனுபவ நுண்ணறிவு ஆகியவைகளே சோதிடம் உண்மையாவதற்கான காரணங்களாகும்.
1. கேள்வி விதி - சோதிடர்கள் கேட்கும் கேள்விகளில் அமைந்திருக்கும் திறன்.
கேள்வி அதிகப்படியான சோதிடர்களை வெற்றி பெறச் செய்ய பெரும் உதவியாக இருக்கிறது. வெற்றியின் இரகசியத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அது எப்படி என்றால்:
1.1.  50 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம்:-
சோதிடரிடம் வந்து சோதிடம் கேட்பவர்கள் எல்லோரும் அதிகமாக இரு கருத்துகளடங்கிய கேள்விகளைக் கேட்கிறார்கள். எ.கா: காரியத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால் ஆகுமா, ஆகாதா? வெற்றி _ தோல்வி தொடர்புடையதானால் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? மங்கள காரியமானால், நடக்குமா, நடக்காதா? படிப்பு தொடர்புடையதானால் தேர்வில் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? (பாசா _ பெயிலா), நலம் கிட்டுமா _ நலம் கிட்டாதா? ஈட்டமாகுமா _ இழப்பு ஏற்படுமா? இப்போது காலம் நன்றாக இருக்கிறதா _ இல்லையா? திருமணம் இப்போது நடக்குமா _ நடக்காதா? குழந்தை ஆணாகப் பிறக்குமா _ பெண்ணாகப் பிறக்குமா? பொதுத் தேர்தலில் இந்தத் தடவை காங்கிரசுக் கட்சி வருமா _ பா.ஜ.க. வருமா? இப்படி இரண்டு பதில்கள் இருப்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தக் கேள்விகளில் எப்போதும் சோதிடம் பாதி மெய் _ பாதி பொய் (பஞ்சபவேத் _ பஞ்ச நா பவேத்) என்பதைப் போல 50 விழுக்காடு முற்குறிப்பு உண்மையாகிறது.
1.2. சோதிடம் 100 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம். எ.கா:-
தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று வருமா? பா.ஜ.க. வருமா? அவன் முதலமைச்சர் ஆவானா _ இல்லையா? இந்தக் கேள்விகளில் சில சோதிடர்கள் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள். சிலர் காங்கிரசு என்கின்றனர். அப்பொழுது எந்தக் கட்சி வந்தாலும் அப்படிச் சொன்ன சில சோதிடர்கள் வெற்றி பெற்றவர் ஆகின்றனர். காரணம், வந்த கட்சி வெல்லும் என்று சொன்ன சோதிடர்கள் இருக்கிறார்கள் அல்லவா? யாரோ சோதிடர்கள் சொன்னது உண்மையாகுவதானது சோதிடம் உண்மையானதைப் போல ஆனதல்லவா? அப்படி ஆவது ஒவ்வொரு தேர்தலிலும் யாரேனும் சோதிடர்களின் முற்குறிப்புகள் உண்மையாவதனால்தான்!
1.3. நீண்ட கால தீர்மானத்திற்கான கேள்விகள்:-
நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எ.கா: எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4லிருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால பவிஷியம் (எதிர்கால பலன்) சொல்லும்போது சிலருக்கு நடந்தே நடக்கும்.
1.4. சரியாகச் சொல்வதில் சோதிடர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் அப்படிச் சொல்வது பொய்யாகி விடுகிறது. எ.கா:
எனது மகனுக்கு எந்தத் திங்கள் எந்த நாளில் திருமணம் நடக்கும்? எங்கள் பாட்டி எந்த ஆண்டு, எந்தத் திங்கள், எந்த நாளில் இறப்பாள்? எனது மனைவிக்கு எந்த நாளில் மகப்பேறு (பிரசவம்) ஆகும்? எனக்கு பதவி உயர்வு எந்த ஆண்டு, எந்த நாளில் கிட்டும்? தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரசு) எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்? பா.ஜ.க. எவ்வளவு இடங்களைப் பிடிக்கும்? ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு வாக்கில் வெற்றி பெறுவார்? எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் நேர்ச்சி (விபத்து) நிகழும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஏதாவது ஒன்றோ இரண்டோ உண்மையாக இருக்குமானால் அது தப்பித் தவறி இருப்பதே அல்லாமல் சோதிடனின் தந்திரத்திலிருந்து ஆனதல்ல.
1.5. எதிர்கால பலன் (பவிஷியம்) - Prediction) சொல்லும் காலத்தின் கேள்விகள்:
இதை எந்த சோதிடனும் சரியாகச் சொல்வது இல்லை. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம். நீங்கள் ஆய்விலும் பார்க்க வேண்டுமானால் 1 திங்களில் அல்லது 3 திங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள்.
1.6. இறந்தகால கேள்விகள்
அங்கே கூட முன்பே சொன்ன எல்லா தந்திரங்களும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த எல்லா பின்னணியிலும் சில சோதிடர்களின் சில குறிப்புகள் உண்மையாகின்றன.
1.7. சோதிடர்கள் அல்லாத பிறர் எவ்வளவோ எதிர்கால பலன் சொல்கிறார்கள். இந்தக் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டால் சோதிடம் தெரியாத அவர்கள் சொல்லும் எதிர்கால பலனில் சில சரியாக இருக்கும். சில தடவை சோதிடர்கள் சொல்வதைவிட இன்னும் நன்றாகவே சொல்வார்கள். இதனால் எதிர்கால பலன் உண்மையாகுவது சோதிடத்திலிருந்து அல்ல, புத்தி கூர்மையான சோதிடனின் மோசம் செய்யும் திறமையினாலும் தந்திரத்தினாலுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. சோதிடரின் திறமை - புத்தி சாதுரியம், அனுபவம், சந்தர்ப்பம்.
பல சோதிடம் பல சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் சிலர் வெறும் ஊகத்தின் மேல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையின் ஊகத்தை சோதிடரின் புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.
3. அனுபவம் - சோதிட அனுபவம் அதிக வேலை செய்கிறது. சொல்லிச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்னும் திறமை தெரிவிக்கிறது.
சோதிடரின் வெற்றிக்கு சோதிடத்தில் அவர் முன்பே சொல்லிச் சொல்லிப் பெற்றிருக்கும் அனுபவம் மிகவும் உதவிக்கு வருகிறது. பாடிப்பாடி பாடகன் ஆகு என்று சொல்லும் பழமொழி போல பொய்யை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் இறுதியில் பொய்யே ஒரு தடவை உண்மையாகி விடுகிறது.
4. வாக்குச் சாதுரியம் - இதுவே சோதிடனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது.
இது சோதிடனின் வெற்றிக்கு முதன்மையானதாக இருக்கிறது. ஈர்க்கும்படியான பேச்சு, சொல்லுக்குச் சொல் சுலோகங்கள் சொல்வது, இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் சில மேற்கோள் சொல்வது, பலன் சொல்லும்போது குறுக்குச் சுவற்றின் மீது விளக்கு வைத்ததைப் போல சொல்வது ஆகிய இவை யாவுமே மிக மிக உதவிக்கு வருகின்றன. வாக்குச் சாதுரியமே சோதிடம் சொல்வதில் இருக்கும் உயிர். சோதிடம் சொல்பவனுக்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
5. சாதகனின் மனநிலை அறிந்து கொள்ளல்
சாதகனின் மனநிலை, துக்கம், கவலை, அச்சம், நிறைவேறாத ஆசை, பிற ஆசைகள் முதலிய மனத்தின் நிலைமையை சோதிடன் பயன்படுத்திக் கொண்டு ஊகம் செய்கிறான். திறமையான ஊகம் சில சமயம் உண்மையாகலாம்.
6. சாமானிய அறிவு
சோதிடனின் சாமானிய அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக மற்றும் குடும்ப அறிவு ஆகிய அனைத்துமே சோதிடம் சொல்பவனுக்கு முன்வந்து கை கொடுத்து உதவுகின்றன. சந்தர்ப்பம், சூழ்நிலையை அறிந்து அதற்குத் தகுந்தபடி பவிஷியம் சொல்பவன் வெற்றி பெறுவான். பலதுறை அறிவு படைத்த ஒருவன் சோதிடம் சொல்வதில் சிறந்து விளங்குவான்.
7. சந்தர்ப்பம் அறிய வல்லவனின் ஊகம்
நிலைமை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளைத் திறம்பட அறிந்து கொண்டு திறமையாக ஊகம் செய்வதில் வல்லமையுடைய சோதிடன் அதிகமாக வெற்றி பெறுகிறான்.
8. எந்த சோதிடனும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே சொல்வதில்லை. ஒருவேளை சொன்னால்கூட குறுக்குச் சுவற்றின் மேல் இட்ட விளக்கு நாலா பக்கமும் ஒளி கொடுப்பதைப் போல அது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமாறு சொல்வதாக இருக்கும்.
அதிகப்படியான சோதிடர்கள் நிகழ்ச்சி, சம்பவம், விளைவுகள் ஆகியன இயற்கையாக நடந்ததன் பிறகு அவைகள் எப்படி நடந்தனவென்று ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பது, வெற்றி _ தோல்வி ஏற்படுவது, வியாதி வருவது _ அது குணமாவது, விபத்து உண்டாவது, இலாப _ நட்டம் ஏற்படுவது ஆகியன பற்றி முன் கூட்டியே உறுதியாக உரைக்கும் சோதிடர் இல்லவே இல்லை. ஒருவேளை சொன்னாலும், குறுக்குச் சுவற்றின் மேல் விளக்கு ஏற்றி வைப்பதைப் போல சொல்கின்றனர்.
9. பல சோதிடம் பொய்யான அனேக எடுத்துக்காட்டுகள்
சில சந்தர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பரப்புரை செய்யப்படுவதில்லை. விஞ்ஞானமில்லாத, உண்மை இல்லாத, தர்க்கத்திற்கு உட்படாத மற்றும் மயக்கம் (பிரமை) என்று மேலே சொல்லப்பட்ட எல்லாம் நிரூபணங்களால் தெளிவாகி உள்ளன. அவ்வளவின் மேல் சோதிடத்தை உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பவர் என்னுடைய ஒரு சாதகத்தின் மேல் கேட்கும் 10 கேள்விகளில் 8 கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுத்து உண்மையை மெய்ப்பித்து ரூபாய் ஒரு கோடியைப் பரிசாகப் பெறலாம். சவாலை ஏற்றுக் கொள்ளும் எந்தத் தனிப்பட்ட மனிதரானாலும் அல்லது குழுவானாலும் கீழ்க்கண்ட எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரம் பெறுக.
10. சவால் 1: 1 கோடி
பவிஷியம் _ இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் ஒரு சாதகத்தின் மீது கேட்கும் 10 கேள்விகளில் 80 விழுக்காடு சரியான பதிலுக்கு ரூபாய் ஒரு கோடி சவால். இது சரியாக எதிர்கால பலன் சொல்லும் தைரியசாலிகளுக்குக் கொடுக்கப்படும். ரூபாய் ஒரு கோடி சவாலின் விவரங்கள்:
இந்த ரூ. ஒரு கோடி சவாலுக்குக் கொடுக்கப்படும் சாதகம் ஒரே ஒரு சாதகம் மட்டுமே. அப்படிக் கொடுக்கப்படும் ஒரு சாதகத்தின் மேல் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சரியான கேள்விகளாக இருக்கும். எந்த விதம் மற்றும் எந்த விடயங்களுடன் தொடர்புடைய கேள்விகள் என்பது பற்றிய விவரங்கள், அத்துடன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் எவை மற்றும் அவைகளுக்கான பதில்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த 10 கேள்விகளில் (ஏ _ பாகம்) 1 முதல் 6 கேள்விகள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால், (பி _பாகம்) கேள்வி 7 முதல் 10 வரையிலான 4 கேள்விகள் 3 திங்கள் பவிஷிய காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி பற்றிய கேள்விகளாக இருக்கும். சோதிடர்கள் எதிர்கால பலன் சொல்பவராக இருப்பதனால் அவர் குறிப்பிடும் காலத்தில் நடக்கும் கேள்விகள் மிக முக்கியமாக இருக்கின்றன. அதிகப்படியான சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷியம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை சரியானது என்று சொல்லிக் கொள்வதால் அவர்கள் சொல்வதைப் போலவே நாம் அவர் சொல்லும் எதிர்கால பலன் 80 விழுக்காடு மற்றும் அதைவிட அதிகம் சரியான பதில் சொல்பவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
அந்த 80 விழுக்காடு எப்படி இருக்க வேண்டு மென்றால் ஏ _ பாகத்தில் _ அப்படி என்றால் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேலுள்ள 6 கேள்விகள் குறைந்தது 5 எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்படி 5 கேள்விக்கான பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் தப்பானாலும் 5 கேள்விக்கான பதில்களும் தப்பு என்றே அறிவிக்கப்படும்.
பி பாகத்தில் அதாவது கேள்வி 7லிருந்து 10 வரையிலான பவிஷிய கால 3 திங்களுக்குள் நிகழும் சம்பவம் தொடர்பான 4 தீர்மானமான கேள்விகளில் குறைந்தது 3 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுக்க வேண்டும். இப்படி 10 கேள்விகளில் குறைந்தது 8 கேள்விகளுக்கு (80%) சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகள் எளிதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். இறந்த மற்றும் நிகழ்காலம் பற்றிய கேள்விகள் அனைத்துமே எளிதாகவும் மற்றும் சாதாரணமானதாகவும் இருக்கும். சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் கூட 3 திங்களுக்குள் நிகழக் கூடியதான சாதாரண கேள்விகளாக இருக்கும். ஆயுள் காலம், மரணம், தனயோகம், திருமணம், மக்கள் பேறு முதலான நீண்ட காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இல்லை. மிகுதியான நன்னடத்தை, ஊர்திகள் (வாகனம்) வாங்குதல், வழிபாட்டு இடங்களுக்குப் பயணம் செய்தல் ஆகியவைகளின் மேல் கேள்விகள் இருக்கும்.
சவால் 2:  ரூ. 10 இலக்கம்
வெறும் இறந்த காலத்தின் மேல் மற்றும் 10 சாதகங்களின் மேல் வெறும் 3 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்களின் மேல் ரூ.10 இலக்கம் சவால். இது பவிஷியம் சொல்வது பற்றி அதைரியப்படும் பயந்தாங் கொள்ளிகளுக்காக. சில சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷிய வாணியில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வது நடக்கக் கூடியதல்ல. நீங்கள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் கேள்வி கேட்டு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். அந்த அச்சப்படும் சோதிடர்களுக்காக இந்தச் சவாலை இப்போது விடுக்கிறேன்.
10 சாதகங்களின் மேல் வெறும் 4 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலுக்குச் சவாலாக நான் 10 சாதகங்களைக் கொடுக்கிறேன். அந்த சாதகங்களின் மீது பின்வரும் கேள்விகள் கேட்கப்படும்.
கேள்வி 1: எந்த சாதகர் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? எந்த சாதகர் இப்பொழுது மரணமடைந்தவர்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி 2: அந்தச் சாதகங்களில் எந்தச் சாதகம் பெண்ணுக்குரியது, எந்தச் சாதகம் ஆணுக்குரியது என்று சொல்ல வேண்டும்.
கேள்வி 3: அந்த பத்து சாதகங்களில் எந்தச் சாதகருக்குத் திருமணம் ஆகி இருக்கிறதோ அவருடைய முதல் திருமண காலம் அதாவது திருமண நாள், திங்கள், ஆண்டு ஆகியவைகளைத் தெரிவிக்க வேண்டும்.
கேள்வி 4: சாதகன் படித்த படிப்பு அதாவது பத்து சாதகத்தில் யார் எந்த வகை பல்கலைக்கழக பட்டம் அல்லது அதை விடவும் அதிகம் படித்திருந்தால் அப்படி அதிகம் படித்துப் பெற்ற பட்டம் குறிப்பிட வேண்டும். சான்று அளிக்கப்பட வேண்டும். (டிப்ளொமா மற்றும் அதைவிடக் குறைந்த கல்வியைக் கணக்கில் எடுக்கக்கூடாது.) பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகப் படிப்பு படித்தவரை மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் ரூ.10 இலக்கம் வெகுமதி இருக்கிறது. ஒவ்வொரு சாதகத்தின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் ((Column) வீ. வாழ்பவர் / இறந்தவர், வீவீ. பெண் / ஆண், வீவீவீ. திருமணம் ஆகியிருந்தால் திருமணமான நாள், திங்கள் மற்றும் ஆண்டு கிறித்தவ காலண்டர் (நாள்காட்டி)படி, திருமணம் ஆகவில்லையானால் ஆகவில்லை என்று, வீஸ். பட்டம் பெற்றவர் / பெறாதவர் போன்ற விவரங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான விவரங்களுக்கு மூடத்தனம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் (மௌடிய மத்து வைச்சாரிகே) என்ற கன்னட நூலில் சோதிடத்திற்கு ரூபாய் கோடி சவால் என்னும் அத்தியாயம் படிக்கவும்.



பொய்யான ஜோதிடர்கள்
பலசோதிடங்கள் (பலன் சொல்லும் சோதிடங்கள்) அதிகமான தடவைகளில் பொய்யாய்ப் போனதற்கான பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. இங்கே சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.
11.1. 1982இல் எக்கனாமிக் டைம்சில் வைசம்பாயா என்னும் சோதிடர் எழுதிய பல சோதிடம் முற்றிலும் பொய்யாகி விட்டது.
11.2. 1983இல் ஜகஜித்பால் என்பவர் சன்டே அப்சர்வர் என்ற வார இதழில் தூமகேது மற்றும் கிரகண பலத்தைப் பற்றி பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று தீர்மானமாகச் சொன்னது எதுவும் நடக்கவில்லை.
11.3.: அஷ்ட்ட கிரகங்களின் (8 கிரகங்கள்) யோக சம்பந்தம் குறித்து எல்லா சோதிடர்களும் ஆபத்து, நாசம், கேடு, வெள்ளம், தீ, பூகம்பம், போர் முதலியன நடக்கப் போகின்றன என்று பெரும் பரப்புரையைச் செய்தார்கள். ஆனால் அஷ்ட்ட கிரகம் அமைதியாக வந்து போனது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
11.4: இராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றி எந்த ஜோதிடனும் முன்னதாகச் சொல்லவே இல்லை. கொலையுண்ட பிறகு நான் முன்பே சொல்லி இருந்தேனே என்று சொல்லத் தொடங்கினார்கள்.
11.4.1: 21, மே, 1991இல் இராஜீவ் காந்தியின் கொலை ஆனது. கொலையாகும் முன்பு மே, 1991இல் இல்லஸ்ட்ரேட் வீக்லியின் 1991க்குப் பிறகு இராஜீவ் காந்தி இந்த நாட்டின் முக்கிய தலைவராகி ஆட்சி நடத்துவார் என்று எழுதியது.
11.4.2: 1991 மே திங்களுக்கு முன்பே இந்த நாட்டின் மிகையான பத்திரிகைகள், அதிகப் படியான சோதிடர்கள் இராஜீவ் காந்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுவார் என்று சொன்னார்கள்.
11.4.3: புகழ்பெற்ற சோதிடர் கே.எஸ்.சரஸ்வதி இதையே ஆதரித்தார்.
11.4.4: புகழ்பெற்ற சோதிடர் பி.கே.சக்கரவர்த்தி 1991க்குப் பிறகு இராஜீவ் காந்திக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்கால பலன் சொன்னார்.
11.4.5: மற்றொரு புகழ்பெற்ற சோதிடர் ஏ.கே.இராசா என்பவர் அதே சந்தர்ப்பத்தில், இராஜீவ் காந்தி 10ஆவது லோக்சபை (மக்கள் அவை) ஆளும் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து அவருடைய தலைமையில் முழுமையாக அய்ந்து ஆண்டுகள் அவர் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருப்பார் என்று  எதிர்கால பலன் சொன்ன இரண்டாவது வாரத்திலேயே அவரது படுகொலை நிகழ்ந்துவிட்டது.
11.4.6: வந்தனா முண்டேல்கர் என்ற வேறொரு சோதிடர் இராஜீவ் காந்தி சாவது தெரிந்திருந்தது; ஆனால் தான் வேண்டுமென்றே சொல்லவில்லை என்று கனமானதொரு பொய்யை அனுப்பினார்.
11.4.7: இன்னுமொரு சோதிடர் கே.என்.ராவ் என்பவர் இராஜீவ் காந்திக்கு சாவு வருவது தனக்கு முதலிலேயே கட்டாயம் தெரியுமென்றும் அதனால்தான் இராஜீவ்காந்தி 1991 சூலையிலிருந்து ஆகஸ்ட் நடுவிற்குள் இறப்பார் என்றும் தெரிவித்தேன் என்றும் கணக்கு கொஞ்சம் தப்பியதால் அவருடைய இறப்பு சற்று வேகமாகவே வந்துவிட்டது என்றும் பெரிய இரயில் விட்டார்.
இப்படியே தேர்தல் பற்றி, மந்திரி பதவிகள் பற்றி, ஆளும் கட்சிகள் பற்றி, இடங்கள் பற்றி ஒவ்வொரு தேர்தலிலும் இந்தச் சோதிட இரயில் விடும் சோதிடர்கள் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடும் இரயிலுக்கு தண்டவாளமும் இல்லை, சக்கரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்களது சோதிட இரயில் அப்பாவிகள், மூடர்கள் ஆகியோர் மீது ஓடுகிறது.
(நூலிலிருந்து...)
நன்றி : http://www.unmaionline.com/new/2066-books.html

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

டந்த மே 29 அன்று முகேஷ் அம்பானியின் 4 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ரிலையன்ஸ் நிறுவனம், ராகவ் பால் எனும் தரகு முதலாளிக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்தை வாங்கியுள்ளது.
ராகவ் பால்
ராகவ் பால்
இதன் மூலம் நெட்வொர்க்-18 கட்டுப்பாட்டில் உள்ள பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சி.என்.என்-ஐ.பி.என், வணிக தொலைக்காட்சி சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஈநாடு குழும தொலைக்காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊடகங்களை நேரடியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி.
ஊடகங்களை கைப்பற்றும் முகேஷ் அம்பானியின் முயற்சி 2008-லேயே தொடங்கியது. அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்த, ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 2,600 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியது. ரூபாய் 525 கோடி மதிப்பிடப்பட்டிருந்த ஈநாடு  நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில் 56.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனத்தின் பங்குகளைத்தான் ஒரு பங்குக்கு ரூ 5,28,630 விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது.
நிறுவனத்தின் மதிப்பீட்டை விட 5 மடங்கு அதிக தொகை கொடுத்து ரிலையன்ஸ் அதை வாங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், வெளியாகியிருக்கும் இந்த பரிமாற்றத்தோடு வெளியில் தெரியாத பல மறைமுக பரிமாற்றங்கள் இருக்கலாம் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.
இந்த காரணத்தை சொல்லி ஈநாடு நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய இந்த பரிமாற்றம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க பிரிவின் விசாரணையின் கீழ் வந்தது.
இந்நிலையில்தான் ரிலையன்ஸ் தன் வசமிருந்த ஈநாடு தொலைக்காட்சியின் பங்குகளை, ராகவ் பாலுக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்துக்கு ரூ 2,053 கோடிக்கு விற்று விட்டது. ராகவ் பாலின் ஊடக நிறுவனங்கள் அப்போது நிதி இழப்புகளை சந்தித்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
ராகவ் பால் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளவும், ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்கவும் கடனுதவியளித்தது இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை. இந்த கடனுக்கு கைமாறாக நெட்வொர்க்-18 மற்றும் டி.வி-18-ன் தகவல் உரிமங்களையும், ஈவு பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்களையும் பெற்றுக்கொண்டது அந்த அறக்கட்டளை.
ஆனால், அந்த அறக்கட்டளையை இயக்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸேதான். இதன் மூலம் ஈநாடு தொடர்பான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ததோடு நெட்வொர்க்18 குழுமத்தையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிலையன்ஸ். நெட்வொர்க்18-ன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களில் அம்பானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நிர்ப்பந்தம் கொடுத்தனர். அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய பல கட்டுரைகள் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டன.
இந்நிலையில்தான், இண்டிபென்டன்ட் மீடியா அறக்கட்டளை வசம் இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தி நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அந்நிறுவனங்களை ரிலையன்ஸ் தனது நேரடி ஆதிக்கதிதன் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முர்டோசின் ஸ்டார் குழுமத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஏற்கனவே தனது மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அம்பானியின் இயற்கை எரிவாயு ஒதுக்கீடு விவகாரத்தை கொண்டு ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், நடப்பது “குரோனி கேப்பிடலிசம்” என்று விமர்சித்திருந்தார். இதை மற்ற ஊடகங்கள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு கொண்டிருந்த போது நெட்வொர்க்18 குழும தொலைக்காட்சிகளும் செய்தி என்ற வகையில் வெளியிடத்தான் செய்தன.
ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்
தனது கட்டுப்பாட்டிலிருக்கும் சேனல்களில், ரிலையன்சுக்கு எதிரான கருத்துகள் இடம் பெறுவதை கூட ரிலையன்ஸ் விரும்பவில்லை. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அம்பானி தரப்பு வாதங்களை செய்திகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் முன் வைக்க வேண்டும் என்றெல்லாம் ரிலையன்ஸ் கோரியிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
எனவே, தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.
நெட்வொர்க் 18-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து நெட்வொர்க்18-ன் ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவியும் தொகுப்பாளருமான சகாரிகா கோஷ் இருவரும் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ராஜ்தீப் சர்தேசாய்
ராஜ்தீப் சர்தேசாய்
இனி தமிழ்நாட்டில் ஜெயா டிவி ஜெயலலிதா புகழ் செய்திகளையும், கலைஞர் டிவி கருணாநிதி புகழ் செய்திகளையும் ‘நேர்மையாக’ வழங்குவது போல அம்பானிக்கு சொந்தமான ஊடகங்கள் ரிலையன்சின் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளை தயாரித்து இந்தியா முழுவதும் வெளியிடும். மிகவும் திறமையான தொழில்முறை ஊடகவியலாளர்கள் மூலம் அவை விளம்பரம் என்று தெரியாதபடிக்கு பார்வையாளர்களுக்கு கடை விரிக்கப்படும். சி.என்.என்-ஐ.பி.என் அம்பானி சேனல் ஆக செயல்படுவது போல எதிர்காலத்தில் பிற ஊடகங்களும் நேரடி கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் செய்திகள் தமக்குள் போட்டி போடுவதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே கட்டியமைக்கப்பட்ட அரசு அமைப்பிலும் நேரடியாக முதலாளிகளின் நேரடி தலையீடு வளர்ந்து வருவதைப் போல, ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நேரடி சாம்ராஜ்யங்கள் உருவாகி வருகின்றன.
இந்திய அரசின் பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அம்பானியின் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று விடும் என்பது புது தில்லி பத்திரிகையாளர்களிடம் நிலவும் பிரபலமான பழமொழி. இனி தில்லி பத்திரிகையாளர்கள் எழுதும் செய்தி அம்பானியின் மேசைக்கு சென்று அனுமதி பெற வேண்டும் என்ற புது பழமொழி உருவாக வேண்டும் போலிருக்கிறது!

நன்றி : http://www.vinavu.com/2014/07/01/reliance-takes-direct-control-of-tv-18/